ராமநாதபுரம், நவ.15: ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியத்திக்குட்பட்ட பட்டிணம்காத்தான் ஊராட்சி அரண்மனை சாலையில் மண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் திறக்கப்படாமல் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் அருகே திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டிணம்காத்தான் ஊராட்சியில் பாரதிநகர் மூன்றாவது அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மையத்திற்கு ராமநாதபுரம் அரண்மனை சாலையில் உள்ள மண்டபம் ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2016-17 நிதியாண்டில் முன்னாள் பட்டிணம்காத்தான் ஊராட்சி தலைவர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7லட்சம் நிதி பெறப்பட்டு பாரதிநகர் மூன்றாவது அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த கல்வியாண்டிலேயே திறக்கப்பட வேண்டிய அங்கன்வாடி மையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பாரதிநகர் மூன்றவாது அங்கன்வாடி மையம் ஓம்சக்திநகர் வடக்கு 4வது தெருவில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஆஸ்பெட்டாஸ் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.