அரியலூர், நவ. 14: கந்தசஷ்டி விழாவையொட்டி அரியலூர் பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி அரியலூர் பாலதண்டாயுதபாணி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கஜமுகசூரன், ஆடுதலைசூரன், சிங்கமுகசூரன், தரகாசூரன், பத்மசூரன், மயூராசூரன், சூரபத்மன் என 7 உருவங்களை தாங்கி வந்த சூரனை ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான் வேல் கொண்டு அழித்து,ஆட்கொண்ட நிகழ்ச்சி நடந்தது. சூரபத்மன் பல்வேறு உருவங்களில் வந்து முருகப்பெருமானுடன் போரிடும் காட்சி, முருகப்பெருமான் வதம் செய்ய வரும்போது சூரன் தப்பித்து ஓடி ஒளிவது, சூரனை அழித்தபிறகும் மீண்டும் மாற்று உருவங்களை தாங்கி போரிட வருவது என்று போர் காட்சிகளை பக்தர்கள் தத்ரூபமாக செய்தனர். பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட ப்கதர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.