மார்த்தாண்டம், அக். 18: குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாக மார்த்தாண்டம் விளங்கி வருவதோடு, கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளின் தலைநகரம் போலவும் விளங்கி வருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பகுதியாக மார்த்தாண்டம் உள்ளது. மலையோர மற்றும் கடலோர மக்கள் உட்பட பலரும் மார்த்தாண்டம் பகுதிக்கு தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
ஆனால், பெருகி வரும் மக்கள்தொகை, வாகனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப மார்த்தாண்டம் பகுதி சாலைகள் விரிவாக்கப்படவில்லை. மார்த்தாண்டம் சந்திப்பை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி, வடக்கு தெரு மற்றும் மார்க்கெட் ரோடு மிகவும் குறுகலாகவே உள்ளன. இதனால் மார்த்தாண்டம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தை அடைந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மார்த்தாண்டம் வடக்குத்தெரு, மார்க்கெட் ரோடு உட்பட சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.