கொடைக்கானல், அக். 16: கொடைக்கானல் பாம்பார்புரம் சாலை அமைத்த 1 ஆண்டிலே குண்டும், குழியுமாக மாறிவிட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டின் அநேக மாதங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இதுதவிர பள்ளி விடுமுறை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவர்.
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களான பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், அப்பர் லேக் வியூவுக்கு செல்வதற்கு பாம்பார்புரம் சாலையே பிரதான சாலையாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலே தரமற்ற பணி காரணமாக சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது.