ஜோலார்பேட்டை, அக். 12: காட்பாடி அருகே நேற்று அதிகாலை ரயிலில் பெண் பயணிகளிடம் 11.5 சவரன் நகை, பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை காட்பாடி வழியாக சென்றது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் காட்பாடி அடுத்த லத்தேரி அருகே சிக்னலுக்காக மெதுவாக சென்றது. அப்போது முகமூடி அணிந்திருந்த மர்ம ஆசாமிகள் கும்பலாக பல்வேறு பெட்டிகளில் ஏறினர். எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் எல்துருத்தி பகுதியை சேர்ந்த அசோக்ரெட்டியின் மனைவி லட்சுமி(32) என்பவர் அணிந்திருந்த 3 சவரன் தாலி செயினை பறித்தனர். அதேபோல் எஸ்-8 பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சின்னபஜார் பகுதியை சேர்ந்த மாதவி(40), எஸ்-சி1 பெட்டியில் பயணம் செய்த தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், வேதபுரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பிந்து(35) ஆகியோரிடம் இருந்து 8.5 சவரன் நகை, ₹8 ஆயிரம் ஆகியவற்றை முகமூடி ஆசாமிகள் பறித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி கூச்சலிட்டனர். உடனே முகமூடி ஆசாமிகள் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியோடி விட்டனர்.