செங்கோட்டை, அக். 9: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சாத்தான்பத்து குளத்தில் இருந்து கத்தியூற்றுகுளத்துக்கு செல்லும் கால்வாயில் புளியரை தட்சிணாமூர்த்தி கோயில் அருகே மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள செங்கோட்டை, புளியரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் புகுந்த தண்ணீர் வடியாததால் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை முடிந்த வயல்களில் பிசான சாகுபடி தொடங்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் சாத்தான்பத்து குளத்தில் இருந்து கத்தியூற்றுகுளத்துக்கு செல்லும் கால்வாயில் புளியரை தட்சிணாமூர்த்தி கோயில் அருகே மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. குறிப்பாக நேற்று இரவு பெய்த மழையால் கால்வாய் ஓரத்தில் அடுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகள் அனைத்தும் தண்ணீரில் சரிந்தன. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறிய வெள்ளம் அங்குள்ள 5 ஏக்கர் வயல்களை சூழ்ந்தது. இதனால் அங்குள்ள நெற்பயிர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.