தாம்பரம், அக். 9: பெருங்களத்தூர் பாப்பான் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு, ₹50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பேரூராட்சியில், குட்வில் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாப்பன் கால்வாய் செல்கிறது. இந்த பாப்பன் கால்வாயில் இருந்து அடையாறு ஆற்றிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது பாப்பன் கால்வாயை ஆக்கிரமித்து பலர் குடியிருப்புகள் கட்டி இருந்ததால், நீரோட்டம் செல்ல வழியில்லாமல் பெருங்களத்தூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அதிகாரிகள் அடையாறு ஆற்றில் உள்ள அக்கிரமிப்புகளும், பாப்பன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஆய்வு செய்து அதிரடியாக அகற்றினர். இருப்பினும், சில மாதங்களில் அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைக்க தொடங்கின. அடையாறு ஆற்றங்கரையில் ₹50 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் பிளாட் போட்டு விற்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். இதில், ஒரு சென்ட் நிலம் ₹3 லட்சம் என விற்பனை செய்யப்பட்டது. பின்னர், இந்த இடத்தில் 8 வீடுகள் கட்டப்பட்டது. இதற்கு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பும் வழங்கப்பட்டது. வருவாய்த்துறையினர் உடந்தை உடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி பகுதியை சேர்ந்த மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.