கரூர், செப். 25: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தாந்தோணி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி சுப்பாராயரெட்டியூர் பொதுமக்கள் அளித்த மனு: 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆழ்குழாய் அமைத்து மினிமோட்டார் வைத்து தண்ணீர் விநியாேகம் செய்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன் மோட்டார் ரிப்பேரானதால் சரிசெய்வதற்காக எடுத்து சென்றனர். இன்னமும் சரிசெய்யவில்லை. குடிநீருக்கு வழியின்றி சிரமப்படுகிறோம். தினமும் 3கி.மீ தூரம் சென்று பக்கத்து கிராமத்தில் குடிநீர் பிடித்து வருகிறோம். 10 ஆண்டாக தெருவிளக்கு எரியவில்லை. இருட்டில் சிரமப்படுகிறோம். பலமுறை மனுஅளித்தும் கோரிக்கை நிறைவேறவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் செய்வோம் என்றனர்.
நன்னியூர் ஊர் மக்கள் அளித்த மனுவில், ஆற்றுப்புறம்போக்கு நிலத்தில் பாதையை மறித்து வீடுகட்டியுள்ளனர். இதனால் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். கடந்த 17ம்தேதி மனுஅளித்தோம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து விட்டோம். ஆக்கிரமிப்பு அகற்றி, பாதையை சீர்செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.