கும்பகோணம், செப். 21: கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரயில் வந்தது. முதலாவது நடைமேடையில் ரயில் வந்து நின்றது. பின்னர் திருச்சிக்கு புறப்பட்டது. ரயில் புறப்படும் நேரத்தில் பாபநாசத்தை சேர்ந்த காமராஜ் (61) என்பவரிடமிருந்து 2 பைகளை எடுத்து கொண்டு ஒரு வாலிபர் தப்பியோடினார். அப்போது கமாராஜ் சத்தம் போட்டார். இதையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் ரயில்வே போலீசார் விரட்டி சென்று லால் பகதூர் சாஸ்த்ரி ரோட்டில் வாலிபரை பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், திருவிடைமருதூர் அடுத்த கோவிந்தபுரம் சன்னதி தெரு முத்துக்கருப்பன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கைப்பைகளை பறிமுதல் செய்து முத்துக்கருப்பனை கைது செய்தனர். பைக் விபத்தில் மேலும் ஒருவர் பலி: பூதலூர் அருகே திருவேங்கடஉடையான்பட்டியை சேர்ந்தவர் ராகுல்காந்தி (25). இவர் தனது உறவினர் சாலியமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்த டென்சிங்குடன் (25) கடந்த 14ம் தேதி செல்லப்பன்பேட்டையில் இருந்து பூதலூர் நோக்கி பைக்கில் வந்தார். அப்போது பூதலூரில் இருந்து செங்கிப்பட்டி நோக்கி புதுப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் காமராஜ் (35) பைக்கில் சென்றார்.
முன்னால் சென்ற லோடு ஆட்டோவை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரில் வந்த ராகுல்காந்தி பைக் மீது காமராஜின் பைக் நேருக்குநேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகுல்காந்தி பலியானார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 15ம் தேதி டென்சிங் இறந்தார். காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த காமராஜிம் நேற்று இறந்தார்.