சேலம், செப்.19:சேலம் அன்னதானப்பட்டியில் காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து, ₹39 ஆயிரம், 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் எஸ்ஐ சீனிவாசன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சண்முகாநகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, மறைவான இடத்தில் இருந்து காசு வைத்து சூதாடிய கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில், 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். விசாரணையில் அவர்கள், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் (27), சண்முகாநகரை சேர்ந்த பூபதி (25), மணி (22) எனத் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ₹39 ஆயிரம் பணம், 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.