கமகமக்கும் அரோமா தெரப்பி!

நன்றி குங்குமம் தோழி

நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே   நம் மனதில் ஒருவித மகிழ்ச்சியும், அமைதி உண்டாகும். அதுவே, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும். இதற்கு காரணம்,  மூக்கில் உள்ள ‘சிலியா’ என்ற மெல்லிய முடிகள்தான். இந்த வாசனையை நுகர்ந்து மூளையில் உள்ள ‘லிம்பிக்’ சிஸ்டத்துக்கு கொண்டு செல்லும். அந்த வாசனையின் தன்மைக்கு ஏற்றபடி மனதும், உடலும் செயல்படும்.

அதை அடிப்படையாக வைத்து, இயற்கை நறுமண எண்ணெய்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறைதான் அரோமா தெரபி என்று சொல்லப்படுகிறது. இந்த அரோமா தெரபி  சிகிச்சையில்,  பெரும்பாலும் லாவெண்டர், டீ ட்ரீ, லெமன், பெப்பர்மிண்ட் ஆகிய எண்ணெய்கள் பயன்படுகிறது. மல்லிகை, ரோஜா, லவங்கப் பட்டை, சந்தனம், ஆரஞ்சு, இஞ்சி, பாதாம் போன்றவற்றிலிருந்தும் அரோமா எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணெயை நான்கு சொட்டுகள் எடுத்து சிறிது தண்ணீருடன் கலந்து, அதிலிருந்து வெளிவரும் வாசனையை தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை நுகர வேண்டும். இதுவே அரோமா சிகிச்சை முறை. இதன் மூலம் மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

இந்த வாசனை எண்ணெய்கள் பூக்கள், இலை, காய், கனி, விதை, பட்டை, பிசின், வேர் என தாவரங்களின் அனைத்து பாகங்களில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் திரவங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. வாசனை எண்ணெய்களை குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது உடலில் வலி உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இசையைக் கேட்டபடியும், புத்தகம் படித்தவாறும், யோகா, தியானம் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும்போதும் இந்த தெரபியை மேற்கொள்ளலாம்.

இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டலாம். இந்தப் புகை பரவும் இடத்தில் உள்ள கிருமிகள் நீங்கும். உடனடி புத்துணர்வு தரும். பதற்றத்தைக் குறைத்து நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, உடல் முழுவதும் சீரான ரத்தம் பரவ உதவும். மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.

தூக்கம் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் லாவெண்டர் எண்ணெயையும், சருமப் பிரச்னைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டீ ட்ரீ ஆயிலையும், அடிக்கடி மன மாற்றம் அல்லது நிலையற்ற உணர்ச்சி வெளிப்பாடு இருப்பவர்கள் மல்லிகைப்பூ எண்ணெயையும், மறதி மற்றும் தலைமுடி பிரச்னைகள் உள்ளவர்கள் லவங்க பட்டை எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

தொகுப்பு : தவநிதி.

Related Stories: