குங்குமப்பூவின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குங்குமப்பூ காஷ்மீர பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது கூங், கேசர் மற்றும் குங்குமப் பூ என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக, குங்குமப்பூவை உணவின் சுவைக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால், குங்குமப்பூ ஏராளமான மருத்துவ குணம் கொண்டதாகும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கூடும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். சுகப்பிரசவம் ஆகும். அதேசமயம், குங்குமப்பூவை கர்ப்பிணிகள் 10 கிராம் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. குங்குமப்பூவில் இருக்கும் பல வேதிப் பொருட்கள் புற்றுநோய்க்கு எதிர்ப்பாக உள்ளதால் புற்றுநோய்க்கான மருந்துகளில் குங்குமப் பூ அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு குங்குமப் பூ ஒரு வரப்பிரசாதம். நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன. மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்கள் குங்குமப்பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.

வயது முதிர்ச்சியால் வரும் கண் பாதிப்பினை குங்குமப்பூ குறைக்கிறது. கண்களில் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலியானது. 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ ஆகும்.

தொகுப்பு: ஸ்ரீ

The post குங்குமப்பூவின் நன்மைகள்! appeared first on Dinakaran.