பரமக்குடி, ஆக.14: பரமக்குடி பகுதியில் கழிவுநீர் கலப்பதால் வைகை ஆறு நாசமாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பரமக்குடியை சுற்றிலும் உள்ள கழிவுநீர் வைகை ஆற்றுப்பகுதியில் வந்து கலக்கிறது. இதுதவிர தரைப்பாலம் அருகே ஆற்றுப்பகுதியில் பலர் மோட்டார் மூலம் தண்ணீர் நிறைத்து குளிப்பதற்காக தொட்டிகள் வைத்துள்ளனர். தினந்தோறும் இப்பகுதியில் உள்ள ஏராளமானோர் காலை, மாலை நேரங்களில் இந்த குளியல் தொட்டிகளை பயன்படுத்துகின்றனர். இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் வைகையாற்று பகுதியில் உள்ள பள்ளமான இடங்களில் குட்டைபோல் நிறைந்துள்ளது. இதனால் அப்பகுதி வீசும் துர்நாற்றத்தால் தரைப்பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். கழிவுநீர் சேரும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள் உள்ளதால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.