கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு 76 வயதாகிறது. பேஸ் மேக்கர் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். பேஸ் மேக்கர் என்பது என்ன? அதை வைப்பதால் இதயம் எப்படிச் செயல்படும்?

- ஆர்.ராஜாராமன், கோமதிநாயக்கன் பாளையம்.

இருதயமானது தசையும் நாணும் இணைந்த ஓர் உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்தஓட்டம் அந்த நான்கு அறை (Chambers) வழியாகவும் செல்வதை ஒரு வழிப்படுத்துவதற்கு என்று சாதனங்கள், வால்வ், (Valves) உண்டு. இரண்டு ஏட்ரியம் (Atrium) மற்றும் இரண்டு வென்ட்ரிகிள் (Ventricle) என்ற அறைகள் கொண்டது நம் இதயம். இவை முறையே வலப்புற ஏட்ரியம் (Right Atrium) வலப்புற வென்ட்ரிகிள் (Right Ventricle) மற்றும் இடது ஏட்ரியம் (Left Atrium) மற்றும் இடது வென்ட்ரிகிள் (Left Ventricle) எனப்படுகின்றன.

அசுத்த ரத்தம் உடலின் எல்லா உறுப்புக்களில் இருந்து இதயத்தை அடைந்து அங்கிருந்து நுரையீரலை அடைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து ரத்தநாளங்கள் மூலமாக எல்லா உறுப்புகளையும் அடைய வேண்டும். இதயத்தின் தசைகள் ஒரு சேர இறுகி அழுத்தும்போது ரத்தமானது ஒருவழிப் பாதை மூலம் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்குச் செல்லும். இவற்றில் இடது வென்ட்ரிகிள் மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் இது சுத்தப்படுத்தப்பட்ட ரத்தத்தை உடலுக்கு அனுப்பும்.

இதயத்தின் தசைகள் உடலின் மற்ற தசைகளைப் போல் அல்ல. அவை தானே துடிக்கும் தன்மையும் ஒருசேர இறுகும் தன்மையும் கொண்டது. எந்தத் தசையும் வேலை செய்ய நரம்புத்தூண்டுதல் (Neural Stimulation) மிக அவசியம். இதயம் துடிக்க அதன் வடிவமைப்பிலேயே நரம்புகள் உள்ளன. இவை நம் உடலின் மற்ற நரம்புகளைப் போல் நமது மூளையின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்காதவை (Autonomous Nervous System). இந்த நரம்புகள் நமது இதயத்தைத் துடிக்கச் செய்யும். மேலும், இவை நமது இதயத்தின் அறைகளை ஒரு சீரான வேகத்துடன் உடலின் தேவைக்கு ஏற்பத் துடிக்கச்செய்யும்.

மேலும் ஏட்ரியம் மற்றும் வென்ட்ரிகிள் ஒன்றாக இறுகுவதில்லை, முதலில் ஏட்ரியம் இறுகும், அதைத் தொடர்ந்து வென்ட்ரிகிள் இறுகி ரத்தத்தை இருதயத்திலிருந்து வெளியே செலுத்தும். இதனை வால்வ் ஒருவழிப்படுத்தும். இருதயத்தின் நரம்புகள் இந்த அறைகள் இறுகிக் குறுகுவதைத் துவக்கி வைக்கும் (Stimulation and Initiation), மேலும் அவை ஒன்றன்பின் ஒன்றாகக் குறுகுவதை சீர்படுத்தும்.இந்த நரம்பு அமைப்பைக் கண்டக்க்ஷன் பாதை (Conduction System) என்று அழைப்போம்.

இது வலப்புற ஏட்ரியம் அருகில் உள்ள சைனோ ஏட்ரியல் நோடில் (Sino atrial node) ஆரம்பித்து, ஏட்ரிய வென்ட்ரிகிள் தடத்தின் (Atrioventricular pathway) வழியே ஏட்ரிய வென்ட்ரிகிள் நோடை (Atrioventricular node) அடைந்து அங்கிருந்து வென்ட்ரிகிள் தடத்தின் (Ventricular pathway) வழியாக வென்ட்ரிகிளை அடைந்து அதைத் துடிக்கச் செய்யும். ஒவ்வொரு இருதயத் துடிப்பையும் சைனோ ஏட்ரியல் நோடில்  ஆரம்பிக்கும் சிறிய மின்சாரத்துகள் (electrical impulse) துவக்கி வைக்கும். இந்தத் துகள் தடத்தில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு தசைகளைத் துடிக்கச்செய்து நம் இருதயத்தை இயங்க வைக்கும். சைனோ ஏட்ரியல் நோட்.  

இதனால் இதயத்தின் பேஸ்மேக்கர் (pacemaker) என்றழைக்கப்படுகிறது. இந்தப் பாதையில் எந்த இடத்தில் ரத்து ஏற்பட்டாலும் இதயம் சரியாக இயங்காது. இதனை கண்டக்க்ஷன் ப்ளாக் (Conduction Block) என்று கூறுவோம்.

சரியான துவக்கம் இல்லாததால் நமது வென்ட்ரிகிள் குறைந்த வேகத்தில் துடிக்கும். இதனால் உடல் தளர்ச்சி, அசதி உண்டாகும். கண்டக்க்ஷன் ப்ளாக் (conduction block) மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction), வால்வுகளின் வியாதிகள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இருதயத் துடிப்பை 24 மணிநேரத்துக்கு இசீஜி மூலம் ஆராய்ந்து (24 hour ECG ) மிகக் குறுகிய வேகத்தில் அது துடிப்பது உறுதியானால் எக்ஸ்டெர்னல் பேஸ்மேக்கர் (pacemaker) பொருத்தப்படும். இந்தக் கருவி நம் இருதயம் துடிக்க வேண்டிய வேகத்தில் அதைத் துவக்கி இயங்க வைக்கும். இவற்றில் பல்வேறு விதங்கள் உண்டு, அவற்றைப் பற்றி மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்.

பேஸ்மேக்கர் பொருத்துவது இருதயத்தின் துடிப்பைச் சீர்படுத்தி, அதன் மூலம் இருதயத்தின் செயல்பாட்டினை, தன்மையோடு செயல்பட வைக்கும் நோக்கத்துடன் செய்யும் சிகிச்சையாகும். பேஸ்மேகர் பொருத்திக்கொண்டவர்கள் மாடி ஏறி இறங்குவதில் தவறு இல்லை. தொடர்ந்து அசதி, மூச்சு முட்டுவது இருந்தால் உங்கள் இருதயநல மருத்துவரை அணுகவும். ஏன் என்றால் பேஸ்மேக்கர் செக் தேவைப்படலாம்.

உணவில் உப்பைக் குறைத்துக்கொள்வது நல்லது என்கிறார்களே அது எப்படி? உப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு?

- கா.சீ. ராதாமணி, புதுப்பட்டி.

நாம் உண்ணும் உணவானது நமக்குத் தேவையான சத்துக்களைத் தருவதோடு, உடலுக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களையும் (மினரல்ஸ்) அளிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மினரல்தான் நாம் தினமும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தும் உப்பு. சோடியம் க்ளோரைட் (Sodium Chloride) எனப்படும் உப்பு, சுவைமட்டும் அளிக்கும் ஒரு பொருள் அல்ல. அது நமது உடலில் பல்வேறு பகுதியின் செயல்பாடுகளை நடத்தும், பாதிக்கும் ஒரு தாதுப்பொருள்.

உப்பில் உள்ள சோடியம் நமது நரம்புகளின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று, இருதயத்தின் மின்சார நரம்புகளின் (conduction system) இயக்கத்திற்கும் இவை இன்றிமையாதது. சரியான அளவுகளிலான சோடியம் நமது உடலில் நீர்நிலை சரிசமமாக (water balance) இருக்கச்செய்யும் ஒரு வஸ்துவாக செயல்படக்கூடியதாகும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் மென்மையான தடுப்புகள் உண்டு அவற்றை மெம்ப்ரனேஸ் (membranes) என்று கூறுவோம். அவற்றை எந்தப் பொருளும் கடப்பதற்கு சோடியம் மிகவும் முக்கியம்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பார்கள். உப்பு மட்டும் இதற்கு விதிவிலக்கன்று. ஊறுகாய் அப்பளம் போன்ற பொருட்கள் உப்பு அதிகம் உள்ளவை. அவை பண்டை நாட்களில் பலகாலம் கெடாது இருக்க பதப்படுத்தி உபயோகப்படுத்தப்பட்டது.  அதிகமாக உப்பை உட்கொள்வதினால் இரத்தக்கொதிப்பு அதிகமாகும், சிறுநீரகம் பாதிக்கப்படும். உப்பானது நமது உடலில் தண்ணீர் சேர்ந்து உடல் உப்பச் செய்யும் தன்மையும் உடையது. அதிக உப்பினால் நீர்சேர்ந்து உடல் பெருக்கும்.

இரத்தநாளங்கள் அதிகமான நீர் மற்றும் இரத்த ஓட்டத்தினால் தடித்து இரத்தக்கொதிப்பு உண்டாகும். இரத்தநாளங்கள் தடிப்பதினாலும் இரத்தக் கொதிப்பினாலும் நமது இருதயம் உடலுக்கு ரத்தம் செலுத்த அதிகமாக உழைக்கவேண்டும். இதனால் இருதயம் பழுதடையும் வாய்ப்பும் உண்டாகும். (Heart failure).வடாம், ஊறுகாய் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் அளவோடு சாப்பிடவேண்டும், அப்படிசாப்பிடும்போது மற்ற உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. ஏற்கெனவே, ரத்தக்கொதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பலவீன இருதயம் உடையவர்கள் வடாம், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நன்று.

Related Stories: