குளியல் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

கூழ் ஆனாலும் குளித்து குடி என்ற பழமொழிக்கு ஏற்ப தினமும் காலை எழுந்ததும் குளித்துவிடுவது நல்ல பழக்கம்தான். ஆனால், சிலர் சுத்தத்தைப் பராமரிக்கிறேன் என்று  ஒரு நாளில்  பல முறை  குளிப்பார்கள்.  அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல.  அதுபோன்று  நீண்ட நேரம் குளிப்பதும் நல்லதல்ல, இது உடலில்  ஒவ்வாமை, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம்.

தினசரி ஒருவேளை என்ற கணக்கில் வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிக்கக் கூடாது.  அப்படி  ஒரு நாளில்  பலமுறை  குளித்தால் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்தும் போது சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அது  அகற்றி நமது உடலில் இருக்கும் பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். மேலும், சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.

பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்கதான் சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். இதனால், ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பதுதான் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கும் இது வித்திடும்.

அதைவிடுத்து, ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவதோடு, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.  

அடிக்கடி குளிக்கும்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவதும், சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும். எனவே, ஒருநாளில்  ஒருமுறை  குளிப்பதே சாலச்சிறந்தது.

தொகுப்பு : தவநிதி

Related Stories: