சாயல்குடி, ஜூன் 21: சாயல்குடி அருகே இருவேலி பாசன கால்வாய் மற்றும் மதகுவை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி, உசிலங்குளம், எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், எஸ்.கீரந்தை, புல்லந்தை, பிள்ளையார்குளம், மறவர் கரிசல்குளம், கூரான்கோட்டை, அல்லிக்குளம், வெள்ளம்பல் ஆகிய பகுதிகளில் நெல், கம்பு, சோளம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பனை மரங்களும் உள்ளன. மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.
மழை காலங்களில் இப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடி வரும் மழை தண்ணீர் வீணாக கடலில் போய் கலந்து வருகிறது. மழை நீரை ஓரளவிற்கு சேமிப்பதற்காக சாயல்குடி இருவேலி கண்மாயில் பொதுப்பணித் துறை சார்பில் கடந்த 1980ல் கால்வாயுடன் கூடிய மதகு கட்டப்பட்டது. மழை காலங்களில் இதில் தேங்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.