பூட்டிய காருக்குள் விளையாடிய சிறுமி மூச்சுத்திணறி பலி சோளிங்கரில் பரிதாபம்

சோளிங்கர், ஜூன் 20: சோளிங்கரில் காருக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு விளையாடிய சிறுமி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

வேலூர் மாவட்டம், சோளிங்கர் தக்கான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(35), கூலித்தொழிலாளி. இவரது மகள் பூமிகா(9). ராஜாவின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தந்தை ராஜாவுடன் வசித்து வந்த பூமிகா அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 15ம் தேதி வீட்டின் அருகே உள்ள கார் மெக்கானிக் ஷெட் அருகே பூமிகா விளையாடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் பூமிகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, தனது மகளை அக்கம் பக்கம் தேடினார். அப்போது மெக்கானிக் ஷெட்டில் உள்ள காருக்குள் பூமிகா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

காரின் கதவை திறந்து உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டு பூமிகா விளையாடியபோது மூச்சுத்திணறி மயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரின் கதவை உடைத்து பூமிகாவை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசில் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: