சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல்தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் எழுந்ததால் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை , கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்து , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி, கடந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடுத்து, கல்லூரியானது ஏப்ரல் 6ஆம் தேதி வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகளின் செமஸ்டர் தேர்வுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆன்லைன் முறையில் தேர்வு வைக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ததாக தெரிகிறது.