செந்துறை, மே 24: அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 96.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் மாநிலத்தில் 12ம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 96.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி மாநில அளவில் கடந்தாண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 24வது இடத்திலிருந்த அரியலூர் மாவட்டம் நடப்பாண்டில் 12ம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோல் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
இதன்படி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 27 அரசு பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 சுயநிதி பள்ளிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் என்று 62 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. நடப்பாண்டு 41 அரசு பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், 17 சுயநிதி பள்ளிகள், 22 மெட்ரிக் பள்ளிகள் என்று 88 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.