சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது: ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!!

சென்னை: சென்னையில் ஏப்.3ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.  ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் உள்ளூர் மைதானம், வெளியூர் மைதானங்களில் லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் மைதானமான சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது. இதில் சிஎஸ்கே அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை அள்ளிச் சென்றனர். இதனிடையே ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

*செல்போன் தவிர மற்ற பிற மின்னணு சாதனங்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

*ஹெல்மெட், லேப்டாப் பைகள், குடை அல்லது பிற பைகள் மைதான வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது.

*பொருட்களை வைக்க மைதானத்தில் லாக்கர்கள் எதுவும் இல்லை.

*டிக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவு மற்றும் வாயிலை கவனமாக பார்த்து அந்த வாயில் வழியாக செல்ல வேண்டும்.

*கவுண்டர் அல்லது ஆன்லைன் வாயிலாக, ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

*கலைவாணர் அரங்கம் பார்க்கிங் பகுதி, பொதுப்பணித்துறை பார்க்கிங் பகுதி, சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகளில் கார் பார்க்கிங் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளது.

*மைதான வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்படாது.

*பீடி சிகரெட், குட்கா, பான் மசாலா அல்லது வேறு எந்த புகையிலை பொருட்களும் அனுமதிக்கப்படாது.

*அனைத்து ஸ்டாண்டிலும் இலவச குடிநீர் வசதி உள்ளது.

*போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக நுழைவு வாயில்கள் திறக்கப்படும்.

* ஒருமுறை வெளியில் சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே வர அனுமதி கிடையாது.

*உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

*வெளியில் இருந்து வரும் உணவு டெலிவரிகளுக்கும் அனுமதி இல்லை.

*செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி கிடையாது.

*மாற்றுத் திறனாளிகளுக்காக I லோயர் ஸ்டாண்டில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு செல்வதற்கு சக்கர நாற்காலி வசதியும் உள்ளது.

Related Stories: