சென்னை: 10,000 சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 14,13,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக கூறினார்.
மேலும் சுகாதார பணியாளர்கள் 10,000 பேருக்கு இன்புளூயன்சா தடுப்பூசி இலவசமாக செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். 1021 மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் இதற்கான தேர்வு வரும் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறினார். இதேபோன்று, 986 மருந்தாளுநர் பணிக்கான தேர்வும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது எனவும் கூறியுள்ளார்.