தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, இன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு  உண்டு’ என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின்  விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்ட முன்வடிவு மறுஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு, மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார். இந்த மசோதாவை ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக), தளவாய்சுந்தரம் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜ), ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்) மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர். இதையடுத்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. பல உயிர்களை காவு வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மீண்டும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு சட்டமன்றத்தை மதித்து, இனி இதனால் ஒரு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க ஆளுநர் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: