'மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது' ...ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.அனைத்துக்கட்சி உறுப்பினர்களுடன் இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தாக்கல் செய்த பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்துகொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறதே. என்ற வேதனையுடன் தான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை கடனாகி - அதனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு இறந்து போயிருக்கிறார். தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கிறது.

இதனைத் தடுக்க வேண்டிய கடமையும் - பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் இந்த அரசுக்கு இருக்கிறது.அந்தப் பொறுப்பை உணர்ந்துதான் இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னைஉயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் மரியாதைக்குரிய . கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ் நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைத்த இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே இணையவழி விளையாட்டு எந்த வித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, பள்ளிக்கல்வித் துறை ஜுலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள 2,04,114 அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவிகித ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன்மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவுஏற்பட்டுள்ளதாக 64 சதவிகித ஆசிரியர்கள் சொன்னார்கள்.

மாணவர்கள் தன்மதிப்புத் திறன் குறைந்துகாணப்படுவதாகவும் - மாணவர்கள்கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் மாணவர்களிடையே ஒழுக்கக்குறைபாடு இருப்பதாகவும் 75 சதவிகிதத்துக்கு மேலான ஆசிரியர்கள் சொன்னார்கள்.இணையதளவிளையாட்டை தடுப்பது தொடர்பாக அரசால் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து, பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநலஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழிவிளையாட்டு தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7.8.2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்பெறப்பட்டது. அதில், 10,708 மின்னஞ்சல்களில்இணையதள விளையாட்டையும், இணையதள ரம்மிவிளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்குஎதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இணையதள விளையாட்டு தொழில்நிறுவனங்களின் பிரநிதிகள், அரசியல் கட்சிபிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்ஆகியோருடன் 11.08.2022 மற்றும் 12.08.2022 ஆகிய நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி, கருத்துகள்பெறப்பட்டன.

* சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் K.சந்துரு குழு அளித்த பரிந்துரையின்அடிப்படையிலும்,

*பள்ளிக்கல்வித் துறையில்நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும்

* இணையதளவிளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதரதரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும் -

* பொதுமக்களின் கருத்துக்களின்அடிப்படையிலும் -

ஒரு வரைவு அவசரச் சட்டம்தயாரிக்கப்பட்டு 26.09.2022 அன்றுஅமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழிசூதாட்டத்தை தடைசெய்தல் மற்றும் இணையவழிஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் 2022-ஐ மாண்புமிகு ஆளுநர் அவர்களால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இதுதமிழ்நாடு அரசின் அரசிதழின் பகுதி IV– பிரிவு2இல் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது.அதன் பிறகு, மேற்கண்ட அவசர சட்டத்திற்குபதிலாக ஒரு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடைசெய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர்.

தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண்.53/2022 என்ற இந்த சட்டமானது கடந்த19.10.2022 அன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக சட்டத்துறையால் அனுப்பப்பட்டது.

ஆளுநர் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளும்அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன. சட்டமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டது. தடைசெய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஆளுநர்அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.அரசியல் காரணங்களில் - கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அப்படி எழுவது இயற்கையானது தான்.

ஆனால் மனித உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

எனது மரணம் கடைசியாக இருக்கட்டும் என்ற சோகக் குரலும் -

என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது என்ற அழுகுரலும் - இனியொரு முறை இந்த மாநிலத்தில் எழக் கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் -

மக்களைப் பாதுகாப்பதும் -

எந்தக் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும் -

எந்தக் குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதும் -

மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும்.

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும்

மாநில அரசுக்கு உரிமை உண்டு.

உரிமை உண்டு.

உரிமை உண்டு.

இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

அரசியல் காரணங்களில் - கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அப்படி எழுவது இயற்கையானது தான்.

ஆனால் மனித உயிர்களைப் பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

எனது மரணம் கடைசியாக இருக்கட்டும் என்ற சோகக் குரலும் -

என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது என்ற அழுகுரலும் - இனியொரு முறை இந்த மாநிலத்தில் எழக் கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்.

சட்டம் ஒழுங்கைப் பேணுவதும் -

மக்களைப் பாதுகாப்பதும் -

எந்தக் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும் -

எந்தக் குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதும் -

மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும்.

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும்

மாநில அரசுக்கு உரிமை உண்டு.

உரிமை உண்டு.

உரிமை உண்டு.

மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே தெரிவிக்க விரும்புகிறேன். எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும் தான்.

மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தின் கடமை ஆகும்.

சட்டவியல் என்பதே சமூக அறிவியல் தான் என்பதை உலகம் முழுவதும் இருக்கும் சட்டமேதைகள் ஒப்புக் கொள்வார்கள்.

பயன்பாட்டில் நீதி என்பது அற நீதி (Natural or Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்பப்பட்டுள்ளது.

எனவே நீதிநெறி, ஒழுக்க விதிகளை காப்பாற்றவே - சட்டநீதியை அடிப்படையாகக் கொண்டு

தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடைசெய்தல் மற்றும்இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 - இம்மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுகிறது.

இனியொரு உயிர் பறிக்கப்படாமல் -

இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல் -

இனியொரு நாள் கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க

அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: