சென்னையில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில் 145 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வாஹன் செயலி மூலம் 3 வாகனங்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 84 வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்ட 58 வாகனங்கள் என மொத்தம் 145 வாகனங்கள் பறிமுதல். மேலும், குற்ற நபர்களை பிடிக்க 377 லாட்ஜ் மற்றும் 100 மேன்ஷன்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னையில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையாளர் சென்னையில் இரவு நேரங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும், அதிவேகத்திலும் செல்லும் நபர்களை பிடிக்க சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் குற்ற நபர்களை பிடிக்க தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (21.03.2023) இரவு சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், நேற்று (21.03.2023) இரவு சென்னையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 7,195 வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.                  

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 81 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றம் 01 இலகுரக வாகனங்கள் என 84 வாகனங்களும், உரிய ஆவணங்கள் இல்லாத மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்கள் என 58 வாகனங்களும் என மொத்தம் 142 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாஹன் செயலி (Vaahan APP) மூலம் 517 வாகனங்கள் சோதனைகள் மேற்கொண்டு, ஆவணங்கள் மற்றும் வாகனங்களின் பதிவு எண்கள் சரி பார்க்கப்பட்டதில் சந்தேகத்திற்கிடமான 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் நேற்று (21.03.2023) இரவு நடைபெற்ற சிறப்பு சோதனையில் மொத்தம் 145 வாகனங்கள் பறிமுதல் செய்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 4,123 நபர்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு 4 பழைய குற்றவாளிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதே போல, குற்ற நபர்களை பிடிக்க, சென்னையிலுள்ள 377 லாட்ஜுகள் மற்றும் 100 மேன்ஷன்கள் என மொத்தம் 477 தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர்.

இச்சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.  

சென்னை காவல்துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், குற்ற நபர்கள்அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, சென்னை காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: