சென்னை: கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோரால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.