உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: உகாதி திருநாள் புத்தாண்டை, நாளை கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22-3-2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும் வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் உணர்வுகளை மதித்து, உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். விந்திய மலைக்குத் தெற்கே பரந்து வாழும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும் ஒற்றுமையும் வலுப்பட வேண்டும். திராவிட இன மக்களுக்குள்ளான ஒற்றுமை மிளிர்ந்து, சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடவும், நமது மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளைக் காத்து உலகளவில் சிறந்து விளங்கிடவும் வேண்டும் என உகாதி திருநாளில் வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: