ரேஷன் அரிசி கடத்திய பாஜ பிரமுகர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அம்பேத்கர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில் தலா 50 கிலோ எடையுடன் 25 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் வேனில் வந்தவர்கள், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த சுடலைமணி (36), ரெட்டியார்பட்டியை சேர்ந்த வரதன் என்பதும், ராஜபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி சங்கரன்கோவிலில் அரிசி ஆலை நடத்தி வரும் செந்தூர்பாண்டிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. போலீசார் கவனத்தை திசை திருப்பும் வகையில், பாஜ உறுப்பினரான சுடலைமணி தன்னை மாநில நிர்வாகி என கூறி கடத்தியது தெரிந்தது.  இதையடுத்து போலீசார் பாஜ பிரமுகர் சுடலைமணி, வரதனை கைது செய்தனர். அரிசி ஆலை அதிபர் செந்தூர்பாண்டியை தேடி வருகின்றனர்.

Related Stories: