குமரி பாதிரியாரின் லேப்டாப்பில் சிக்கியது சென்னை பெண்கள் உட்பட 80 பேரின் ஆபாச வீடியோ: போலீசார் நெருங்கியதால் சரணடைய திட்டம்?

நாகர்கோவில்: குமரி பாதிரியாரின் லேப்டாப்பில் சென்னை பெண்கள் உட்பட 80 பேரின் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளது. அவரை பிடிக்க அமைக்கப்பட்ட 2 தனிப்படைகள் நெருங்கியதால், தலைமறைவான பாதிரியார் சரன்டைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமாநகர் குடயல்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ (29). குமரி மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். இவ்வாறு பணியாற்றிய இடங்களில் தேவாலயத்துக்கு வந்த சில இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் செய்து பின்னர் தனது வலையில் வீழ்த்தி உள்ளார். வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி மயக்கி ஆபாசமாக அவர்களை வீடியோ பதிவும் செய்துள்ளார். அவற்றை தனது லேப் டாப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில், பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது நர்சிங் மாணவி மற்றும் மினி அஜிதா என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ் அப் சாட்டிங் பதிவுகள் சமூக வலை தளங்களில் பரவின. இதனால், பாதிரியார் தலைமறைவானார். அவர் தற்போது கேரளா அல்லது பெங்களூருவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நர்சிங் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் குமரி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்ய ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிரியாரிடம் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னையை சேர்ந்த இளம்பெண்களும் ஏமாந்துள்ளனர். சென்னையில் திருமண வீட்டிற்கு பிராத்தனை செய்ய சென்ற இடத்தில் ஒரே நாளில் அங்கு ஒரு இளம்பெண்ணை தனது வலையில் வீழ்த்தி உள்ளார்.

தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு பாதிரியாரே திருமணம் செய்து வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசாரிடம் சிக்கிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்த போது சுமார் 80க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே, தற்போது தனிப்படை போலீசார் நெருங்கியதால், தலைமறைவாக உள்ள பாதிரியார் பெனடிக்ட் சரண் அடைய  முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* தைரியமாக புகார் அளிக்கலாம்

சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், ‘பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். ஆன்லைன் மூலமும் புகாரை அனுப்பி வைக்கலாம். பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து பரப்பப்பட்டு  வருகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.

Related Stories: