கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேருக்கு வரும் 17ம் தேதி வரை சிறைக்காவல் வைக்க இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் அதிகாலை நெடுந்தீவு அருகே நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்தது. மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.