புதுடெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு டெல்லி ஆம் ஆத்மி அரசு புதிய கலால் கொள்கையை உருவாக்கியது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.இதை தொடர்ந்து கலால் துறை அதிகாரிகள் உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதனடிப்படையில் கலால் துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருந்த சிசோடியாவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த சிபிஐ அவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி அவரை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவிடம் கடந்த 7ம் தேதியன்று நேரில் சென்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் மழுப்பலாக அவர் பதில் அளித்தார். பின்னர் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.