இந்திய பாதுகாப்பு நலன்கருதி சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்: வீரர்களுக்கு உளவு அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி சீன செல்போன்களை ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்த வேண்டாம் என்று உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியா - சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான பதற்றம் நிலவிவரும் சூழலில், சீனத் தயாரிப்பு செல்போன்களைப் பயன்படுத்துவது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘இந்திய ராணுவத்தினரும், அவர்களின் குடும்பத்தினரும் சீனா செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புத்துறை உளவு அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீனாவின் செல்போன் செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருக்கிறது. டிக்டாக் உட்படபல செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவுடன் தொடர்புடைய பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

Related Stories: