தூத்துக்குடியில் பரபரப்பு; பாலில் கலப்படம் செய்து விற்க முயற்சி: 1400 லிட்டர் பறிமுதல்; உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த வாரம் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பாலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்துபவர்கள் மீதும், கலப்படம் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கலப்பட பால் விற்பவர்களை கையும், களவுமாக பிடிக்க தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். மேலும் இன்று (6ம் தேதி) முதல் இது தொடர்பாக சோதனை நடத்தப்படும் என்றும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி பழைய பஸ்நிலைய ஆவின் பால் அலுவலகம், ஜெயராஜ் ரோடு, பாளை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பால் விநியோக மையங்கள், பால் பூத்கள், அந்த வழியாகச் செல்லும் பால் வேன்கள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாலில் தண்ணீர் கலந்திருப்பதையும், வெள்ளை நிற ரசாயன பவுடரை 100 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி., கலந்து அதை பாலில் கலந்ததையும் பால்மானி கருவிகள் உதவியுடன் கண்டுபிடித்தனர். இதையத்து கலப்படம் என உறுதி செய்யப்பட்ட 1400 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலில் கலப்படம் கலந்த பால் பண்ணை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்று தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: