திருச்சி மாவட்டத்தில் கோயில் விழாக்களில் நகை பறிக்கும் பெண் அதிரடி கைது

*ஒரேநாளில் 16 வழக்கு பதிவு

*64 பவுன் நகைகள் மீட்பு

முசிறி : திருச்சி மாவட்டத்தில் கோயில் விழாக்கள், பஸ் நிலையங்களில் பெண்களிடம் நகையை திருடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒரேநாளில் 16 வழக்குகள் பதிந்து, 64 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி மாவட்டம் சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழா, பேருந்து நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வந்தது. திருட்டை தடுக்கும் வகையில் எஸ்பி சுஜித்குமார் உத்தரவின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகப்பட்ட போலீசார் அவரை சமயபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரேகா(42) என தெரிய வந்தது. கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் பல வருடங்களாக பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்களை குறி வைத்து, அங்கு சென்று பெண்களிடம் நகை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இவர் மீது சமயபுரம் போலீசில் 9, மண்ணச்சநல்லூர் போலீசில் 3, கொள்ளிடம் போலீசில் ஒன்று, லால்குடி போலீசில் 3 என ஒரே நாளில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 64 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத்தொடர்ந்து ரேகாவை கைது செய்த சமயபுரம் போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories: