மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழாவையொட்டி, ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் ஏழை எளியோருக்கு நேற்று வழங்கினார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு மங்கல இசையுடன் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு பங்காரு அடிகளாரை தங்கரதத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாமோதர்தாஸ் மோடி, பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசிபெற்று ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டார். மேலும், நேற்று மாலை 5 மணியளவில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அரங்கில் பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழாவையொட்டி ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி அ.ஆ.அகத்தியன், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்  ஸ்ரீதேவி  அனைவரையும் வரவேற்று பேசினார். இதனை தொடர்ந்து விழா மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. தீக்காராமன், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழா  பேருரையாற்றினார். பங்காரு அடிகளார் ரூ.3 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனம், சைக்கிள், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் உள்ளிட்ட 115 விதமான நலத்திட்ட உதவிப் பொருட்களை 3,100 ஏழை, எளியவர்களுக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று காலை பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு பங்காரு அடிகளார் சிறப்பு பூஜை செய்து தனது பிறந்தநாள் கேக்கினை செவ்வாடை பக்தர்கள் முன்னிலையில் கேட் வெட்டி வழங்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிர்வாகிகளும், சேலம்  மற்றும் நாமக்கல் மாவட்ட சக்தி சித்தர் பீடம் நிர்வாகிகளும் செய்கின்றனர்.

Related Stories: