பொன்னேரி நகைக்கடையில், நகை வாங்குவது போல் 3 சவரன் திருட்டு: வாலிபருக்கு வலை

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று ஒரு வாலிபர் நகை வாங்குவது போல் நடித்து, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 3 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஹரிஹரன் பஜார் பகுதியில் நீண்ட காலமாக நகைக்கடை நடத்தி வருபவர் ராகவன். இந்நிலையில், நேற்ற மாலை ஒரு வாலிபர் மற்றும் சிலர் நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்தனர். பின்னர், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து நகைகளையும் போட்டு அழகுபார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்த நகைகளில் சிலவற்றை அந்த வாலிபர் செல்போனில் படம்பிடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கடை ஊழியர் மற்றும் ராகவன் அசந்த நேரத்தில், அந்த வாலிபர் டேபிளின்மீது பார்வைக்கு வைத்திருந்த 3 சவரன் நகைகளை திருடிக்கொண்டு நைசாகத் தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு, டேபிளில் இருந்த நகைகளை ஊழியர்கள் எண்ணி பார்த்தபோது, அதில் 3 சவரன் நகைகள் திருடுபோயிருப்பது ராகவனுக்கு தெரியவந்தது. மேலும், கடையில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த வாலிபர் 3 சவரன் நகைகளை திருடி செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. இப்புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிரா பதிவுகைள ஆய்வு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: