திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்து அறைகள் ஒதுக்கீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் முகத்தை ஸ்கேன் செய்து அறைகள் ஒதுக்கீடு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக திருமலையில் ₹50 முதல் ₹7 ஆயிரம் வரையிலான கட்டணத்தில் தேவஸ்தானம் சார்பில் அறைகள் உள்ளது. இதில் 40 சதவீத அறைகள் ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அறைகள் நேரடியாக திருமலைக்கு வந்த பிறகு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதுவரை இந்த அறைகளை பெறுவதற்கு பக்தர்களின் கைரேகைகளை பதிவு செய்து வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு உள்ள அறைகளை இடைத்தரகர்கள் குறைந்த கட்டணத்தில் பெற்று அதிக கட்டணத்திற்கு விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதமாக திருமலையில் அறைகள் பெறும் பக்தர்களின் முகத்தை அடையாளம் காணும் விதமாக போட்டோ ஸ்கேனிங் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால் அறைகள் பெற்ற பக்தர்கள் இருந்தால் மட்டுமே காலி செய்யும் முடியும். அப்போதுதான் அறைகளுக்கான முன்வைப்பு தொகை பக்தர்களுக்கு கிடைக்கும். இதனால் இடைத்தரகர்கள் மூலம் அறைகள் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

₹4.14 கோடி காணிக்கை

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மொத்தம் 59 ஆயிரத்து 392 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 20 ஆயிரத்து 714 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. இதில், ₹4.14 கோடி காணிக்கையாக கிடைத்தது. இன்றைய நிலவரப்படி நேர ஒதுக்கீடு டிக்கெட் பெறாமல் வரும் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து   சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories: