மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து

டெல்லி: மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போதே மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என்பது தெரிகிறது.

அரசின் கொள்கை சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றாலும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று மாற்றம் செய்ய வேண்டியது அரசின் கடமை. மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிதாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தலைமை நீதிபதி பரபரப்பாக பேசியுள்ளார்.

நீட் தேர்வு:

மருத்துவப் படிப்புக்குள் நுழைய நீட் தேர்வு கட்டாயம் என கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கலான பல்வேறு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி ஒன்றிய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு அரசு அளித்தது. ஆனால், அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, மீண்டும் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. 

Related Stories: