கோவை: கோவை கவுண்டம்பாளையத்திற்கு காரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் நேற்று இரவு வந்தனர். அவர்கள் அப்பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் சில்மிஷம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்து காரில் வந்த திலீப் என்பவர் சினிமா சூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் பொம்மை துப்பாக்கியை காட்டி திருநங்கைகளை மிரட்டி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் எஸ்ஐக்கள் துரைராஜ், அய்யாசாமி ஆகியோர் துப்பாக்கியை பறிமுதல் செய்து 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கொல்லம் திருநெல்லை பாலக்காட்டை சேர்ந்த ஜாய் மகன் திலீப் (33), பாலக்காடு புதூர் டெம்பிள் வீதியை சேர்ந்த சுரேஷ் மகன் கிஷோர் (23), மாங்கரையை சேர்ந்த உஜ்ஜயனார் மகன் சமீர் (30) என்பதும், குறும்படம் எடுத்து வந்ததும், யூ டியூப் சேனல் நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு செல்லும்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணைக்கு பிறகு ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.