வண்ணாரப்பேட்டையில் 750 போதை மாத்திரை 500 கிராம் கஞ்சா பறிமுதல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 750 போதை மாத்திரை், 500 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட கிழக்கு கல்லறை சாலையில், உடல் வலிக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப்பொருளாக சிலர் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவர்களை சோதனை செய்ததில், சுமார் 750 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.

இதனையடுத்து, 4 பேரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த கோளாறு மணி (எ) சரத் (27), சஞ்சய் (எ) அல்வா சஞ்சய் (26), கார்த்தி (எ) கருவாடு கார்த்தி (25), சதீஷ் (எ) கருப்பு சதீஷ் (30) ஆகியோர் வண்ணாரப்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போதையாக விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: