கோவையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி கொலை எழும்பூர் நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி சரண்

சென்னை: கோவையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31). ரவுடியான இவர் கடந்த 12ம் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையில் செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் ராஜா (30) என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் சஞ்சய் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்திய பாண்டியை தீர்த்து கட்டியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் தேடி வந்த சஞ்சய் ராஜாவின் கூலிப்படை கூட்டாளிகள் காஜா உசேன் (23), சல்பான் கான் (23), ஆல்வின் (34), சஞ்சய் குமார் (23) ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் வேலூர் சென்று சரண் அடைந்த 4 பேரையும்  பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சத்தியபாண்டியை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.

Related Stories: