சென்னை: கோவையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி (31). ரவுடியான இவர் கடந்த 12ம் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையில் செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் ராஜா (30) என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் சஞ்சய் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்திய பாண்டியை தீர்த்து கட்டியுள்ளனர்.