பந்திப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி தவித்த காட்டு யானை: 10 மணி நேரம் போராடி காப்பாற்றிய வனத்துறை..!

பந்திப்பூர்: பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய காட்டுயானையை மீட்டு 10 மணிநேரம் போராடி வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்து அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி  வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழந்தது.

இதனை பார்த்த  நிலத்தின் உரிமையாளர் உடனடியாக மின்வேலியை துண்டித்த நிலையில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் அதன் காலில் சுற்றி இருந்த மின் கம்பிகளை வெட்டி அகற்றினர். ஆனால் யானை எழுந்து நிற்க முடியாமல் தவித்தது. பின்னர் ஜெசிபி எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராடி அந்த யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து யானையை காப்பாற்றி எழுந்து நிற்க வைத்தனர். பின்னர் அந்த யானை வெற்றிகரமாக வன பகுதிக்குள் நடந்து சென்றது.

Related Stories: