யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: யானைகள் வழித்தடத் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடத்தை அடையாளம் காணுதல், யானைகள் வழித்தடத்துக்கான உடனடி மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய யானைகள் வழித்தடத் திட்டத்தை மேற்கொள்ள அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கான வரைவு அறிக்கையும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்திலே அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது நியாயமற்ற செயல். எனவே, முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, குழு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி.தினகரன்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக அரசின் வனத்துறையின் சிறப்புக்குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரகங்களை ஒட்டிய சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், நெருக்கடியான யானை வழித்தடங்களை அடையாளம் காணுதல், யானைகளுக்கான நீர் ஆதாரம் உள்ளிட்டவைகள் அத்தியாவசியமானது என்றாலும், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் மலைவாழ் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இவ்வறிக்கை கடும் கண்டத்திற்குரியது.

எனவே, தமிழக அரசின் வனத்துறையால் அவசரகதியில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை உனடியாக திரும்பப் பெறுவதோடு, முறையான ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து, உரிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின் கருத்துகளை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.

The post யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: