தோகைமலை அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி-ராக்கம்பட்டி அணிக்கு முதல்பரிசு

தோகைமலை : தோகைமலை அருகே அ.உடையாபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கூடலூர் ஊராட்சி ராக்கம்பட்டி அணி முதல் பரிசு பெற்றது.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி கழுகூர் அ.உடையாபட்டி மிரட்டல் பாய்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது. மேற்கு மாரியம்மன் கோவில் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்த கபடி போட்டிக்கு விழா கமிட்டியாளர்கள் தலைமை வகித்தனர். இதில் முன்னாள் கபடி வீரர்கள், இளைஞர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். கரூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் பரபரப்பான இறுதி போட்டியில் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கூடலூர் ஊராட்சி ராக்கம்பட்டி இளஞ்சிட்டு கபடி அணியினரும், கழுகூர் அ.உடையாபட்டி மிரட்டல் பாய்ஸ் அணியினரும் விளையாடினர். ஆட்ட முடிவில் ராக்கம்பட்டி இளஞ்சிட்டு கபடிகுழு அணி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்து 23 மற்றும் 5 அடி சுழல் கோப்பையை தட்டிச்சென்றது. மேலும் 2வது பரிசாக ரூ.6 ஆயிரத்து 23 மற்றும் 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பை கழுகூர் அ.உடையாபட்டி மிரட்டல் பாய்ஸ் கபடி அணிக்கு வழங்கப்பட்டது.

இதேபோல் 3வது பரிசாக ரூ.4 ஆயிரத்து 23 மற்றும் சுழல் கோப்பையை திருச்சி லவ் ஸ்டார் கபடி குழுவினர் பெற்றனர். 4வது பரிசு ரூ.3 ஆயிரத்து 23 மற்றும் மற்றும் சிறப்பு கோப்பையினை கரூர் மாவட்டம் செம்பாறைகல்லுப்பட்டி எஸ்.கே.எம் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியும் பெற்றனர்.

தொடர்ந்து கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 23 சிறப்பு பரிசுகள் உள்பட சிறந்த அணிகள், சிறந்த வீரர்கள் என ஏராளமான சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. கபடி போட்டியைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கபடி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: