மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மலம் கலந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் தேனடை தான் கிடந்ததாக விழுப்புரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் கே.பி பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக சிலர் கூறியதால், நேற்று காலை பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கஞ்சனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-கலெக்டர் சுதன்ஜெய் நாராயணன், ஆர்டிஓ சாகுல் அமீது, ஊராட்சி உதவி இயக்குநர் விக்னேஷ், தாசில்தார் யுவராஜ், செஞ்சி டிஎஸ்பி கவினா, குடிநீர் வடிகால் வாரிய செயற்ெபாறியாளர் மோகன் உள்ளிட்ட குழுவினர் வந்து அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மலம் கலந்ததாக கூறப்பட்ட கிணற்றில் இறங்கி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து தேனடையை குழுவினர் கைப்பற்றினர். குடிநீர் கிணற்றில் மனிதக் கழிவு கலக்கவில்லை, தேனடைதான் கிடந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்ட அறிக்கையில், ‘குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என்ற தகவல் முற்றிலும் தவறான செய்தி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் அந்த கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலம் என செய்திகளில் வரப்பெற்ற பொருளானது தேன்அடை என தெரிவிக்கப்படுகிறது. கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் அது எடுத்துக் காண்பிக்கப்பட்டது. இருப்பினும் மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குடிநீர் கிணற்றில் கிடந்தது அடை… தேன் அடை… விழுப்புரம் கலெக்டர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: