கொளத்தூர் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

பெரம்பூர்: அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நேற்று முன்தினம் கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அந்த ஆட்டோவில் வந்த 2 பேர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர்கள் கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் (31) மற்றும் கொடுங்கையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற கோண சீனு (40) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 2 கிலோ 750 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Stories: