சென்னை: திருமண தகவல் மையம் மூலம், இளம்பெண்களை மயக்கி, நகை மற்றும் பணம் பறித்த காதல் மன்னனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை வரன் தேடினார். அதில் அந்த பெண் தன் விவரங்களை பதிவிட்டு இருந்தார். இதை வேலூர், காந்தி நகர், தாஜ்புராவை சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு, திருமண தகவல் மையத்தில் புகைப்படத்தை பார்த்தேன். எனக்கு உன்னை பிடித்து இருக்கு என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணிடம், உபேஸ் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவரும், திருமணம் செய்துகொள்ளும் நபர் தானே என நினைத்து எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு முகமது உபேஸ் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வரும்படி கூறியுள்ளார். அந்த பெண்ணும் வருவதாக கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி, சென்னைக்கு வந்து ராயப்பேட்டையில் அவரை சந்தித்துள்ளார். இதற்கிடையில், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. நகை இருந்தால் கொண்டு வா. திருமணத்தின் போது நகையை திருப்பி கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.