டெல்லி: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சரிந்தன.
இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை நவீன இயந்திரங்கள் உதவியுடன் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுவது, இவ்விரு நாடுகளிலும் தீராத சோகமாக அமைந்துள்ளது. இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது. இரு நாடுகளுக்கும் 65 நாடுகளில் இருந்து மீட்பு, நிவாரண பணிகளுக்காக குழுவினர் விரைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நிலநடுக்கத்தால் பாதித்த 70க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு தீர்வு காண முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியர்கள் பாதிப்பு குறித்து இருநாட்டு தூதரகங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.