மகளிர் உலக கோப்பை டி20; பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடக்கம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர்  டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளும் பங்கேற்கும் பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. தென் ஆப்ரிக்காவில்  8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்.10ம்  தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து, வெஸ்ட் இன்டீஸ் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 5 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும்.

அவற்றில் வெல்லும் அணிகள் பிப்.26ம் தேதி நடைபெறும்  இறுதி ஆட்டத்தில் களம் காணும். போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,  பங்கேற்கும் அணிகள் தென் ஆப்ரிக்கா போய் சேர்ந்துள்ளன. அந்த  அணிகள் நாளை முதல் பயிற்சி ஆட்டங்களில் மோதுகின்றன. நாளை மட்டுமே  5 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அவற்றில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்,  அயர்லாந்து - இலங்கை,  தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து,   இந்தியா - ஆஸ்திரேலியா,  வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது 2வது பயிற்சி ஆட்டத்தில் பிப். 8ம் தேதி  வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: