ஒன்றிய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது; ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குமுறல்..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு ரூ.43,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2023-2024ம்  நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, ஒன்றிய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது.

இதற்குமுன் கொரோனா காலத்தில் 2020ல் ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 50,000 தாண்டிவிடும் என கூறப்படுகிறது. இதனால் சராசரி மக்கள் அதிர்ச்சியடுத்துள்ளனர். 

Related Stories: