168 ரன்னில் நியூசி. படுதோல்வி தொடரை கைப்பற்றியது இந்தியா: ஆட்டநாயகன் ஷூப்மன் கில்

அகமதாபாத்: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 168  ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பண்டியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து தரப்பில் டஃபி நீக்கப்பட்டு லிஸ்டருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இஷான், ஷுப்மன் கில் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். இஷான் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து கில்லுடன் ராகுல் திரிபாதி இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. திரிபாதி 44 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சோதி சுழலில் பெர்குசன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சூரியகுமார் 24 ரன் எடுத்து (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற, கில் - கேப்டன் ஹர்திக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக 103 ரன் சேர்த்தது. கில் 54 பந்தில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டி20ல் அவர் அடித்த முதல் சதம் இது. ஹர்திக் 30 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி டேரில் பந்துவீச்சில் பிரேஸ்வெல் வசம் பிடிபட்டார்.

இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது. கில் 126 ரன் (63 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்), ஹூடா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் மைகேல் பிரேஸ்வெல், பிளேர் டிக்னர், ஈஷ் சோதி, டேரல் மிட்செல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஃபின் ஆலன், டெவன் கான்வே இருவரும் துரத்தலை தொடங்கினர். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் இருவரும் துல்லியமாகப் பந்துவீசி அசத்த, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

நியூசிலாந்து 12.1 ஓவரில் 66  ரன் மட்டுமே எடுத்து 168  ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. டேரல் மிட்ெசல் அதிகபட்சமாக 35 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 4 அர்ஷ்தீப் -2, மாவி, மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்துக்கு எதிரான ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியது.

Related Stories: